தனுசு

 நீண்ட வசிகரமுகமும்,பேச்சில் வேகமும், தன் குடும்பத்தவர்களையே நேசிக்கும்குணம் கொண்ட தனுசுராசி நேயர்களே! வானத்தில் கோட்டை கட்டுபவர்கள். பிறருக்குக் கொடுத்துக் கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். பொதுவாக நீங்கள் சாதுவானவர்.
    இந்த ஆண்டில் ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கும் உங்களை சனிபகவான் எதிலும் நிதானமாகவும், சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாரு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுபகாரியங்கள் நடக்கும். பூர்வீக சொத்துக்கள், சிரமமில்லாமல் கைவந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம், எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும். தேக ஆரோக்கியம் சீராக இருக்கும். சமூகத்தில் உயர்ந்தவர்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து வரும் நல்ல செய்திகள் உங்களின் செவிகளைக் குளிர்விக்கும். ஆதாயமும் நல்கும். உங்களின் சுய முயற்சியின் அடிப்படையில் செயற்கரிய காரியங்களைச் செய்வீர்கள்.
     உங்களால் சகோதர, சகோதரிகளுக்கும் நன்மை உண்டாகும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவீர்கள். உங்களின் கருத்துக்கள் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண் பழிகளில் இருந்தும், வழக்குகளில் இருந்தும், குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டு விடுவீர்கள். அதற்கான இழப்பீடுகளும் கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் தீயவர்களின் தொடர்பும் ஏற்படும். இதற்காக அஞ்சத் தேவையில்லை. செய்தொழிலில் தினமும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். இந்த ராசிகாரர்கள் சிலருக்குப் புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். மற்றவர்களைத் தலைமை தாங்கி வழி நடத்திச் செல்லும் அளவிற்கு உயர்வீர்கள். கல்வி, கேள்விகளில் அரிய சாதனைகள் புரிய வாய்ப்பு கிடைக்கும்.
     குடும்பத்தில் அமைதி நிலவும். செல்வத்தோடு செல்வாக்கு உயரும். எதிர்பாராத இடங்களிலிருந்து தக்க உதவிகளைப் பெறுவீர்கள். உங்களின் தன்னபிக்கை உயரும். பேச்சில் வசீகரமும், நடையில் கம்பீரமும் ஏற்படும். தத்துவ ஆராய்ச்சிகளில் ஈடுபட மனம் விழையும். உங்களின் செயல்களை முறைப்படுத்திச் செய்வீர்கள்.

பரிகாரம்
ஆஞ்சநேயருக்கு வியாழன் அல்லது ஞாயிற்று கிழமையில் 108 வெற்றிலை மாலை அணிவித்து வணங்கவும். வியாழன் கிழமைகளில் குருபகவானையும், தட்சணாமூர்த்தியையும் வணங்குவது நல்லது.